Friday, May 01, 2026

மே மாதத் திருமணங்கள் 1






 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

லக்ஷ்மிகல்யாண வைபோகமே...2 என் அப்பா அம்மா திருமணம் மே 17 1943.

புஷ்பா என்கிற பாப்பாவுக்கு ஜாதாகம் கணிக்கவில்லை.

பெற்றோர் ஸ்ரீ வீரரரகவனுக்கும் அவரது மனைவி திருமதி.ருக்குமணிக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் நிறைய.

ருக்குமணி அம்மா ஆயில்ய நட்சத்திரமானதால் திருமணம் தடைப்பட்டு

12 வயதில்தான் தன்னைவிட 14 வயது மூத்த ஸ்ரீ வீரராகவனைத் திருமணம் செய்தாராம்.

அதுவும் அவருடைய அப்பா ,அம்மா இருவரும் ஏற்கனவே காலமாகிவிட்டதால்தான் இந்தத் திருமணம் நடந்ததாக எங்க கொள்ளுத் தாத்தா செவல் ராமய்யங்கார் சொன்னதாக புஷ்பா என்ற பாப்பா அதான் எங்க அம்மா ஜயலக்ஷ்மி நாராயணன் சொல்வாங்க.

அதனால்தான் பெண் பிறந்ததும் ஜாதகம் குறிக்கவில்லையாம்.


குழப்பிட்டேனா. சரி, ஒரிஜனல் கதைக்கு வரலாம்.

இந்த மாதிரி ஜாதகம் இரண்டுபேருக்குமே இல்லைன்னதும்

திருநெல்வேலிலேருந்து தாத்தா ஸ்ரீனிவாசன் சென்னைக்கு கடிதம் போட்டாராம்.


எல்லாம் பகவான் விருப்பம் சங்கல்பம்.

நாராயணனுக்குப் பெண்ணைப் பிடித்தால் பூக்கட்டிப் போட்டு கோவிலில் சம்மதம் வாங்கலாம் என்று சொன்னாராம்.

அதன் படி 22 வயது சிஞ்சீவி நாரயணன் தன் அக்காவோடும் அத்திம்பேர் இன்னும்  ஒரு கசின் அக்கா  (என் வருங்கால மாமியார் திருமதி கமலா சுந்தரராஜன் )இவர்கள் சகிதம் ஒரு டாக்ஸியில்,

அந்த வரிசை ஸ்டோர்வீட்டில் பெண் பார்க்க வந்தார்களாம்.


சேச்சிப்பாப்பாவும் தூக்க முடியாத ஒரு பட்டுப்புடவை கட்டி,கழுத்து நிறைய நாலு வடம் சங்கிலி போட்டு, புதிதாகத் தைத்த பஃப் ஸ்லீவ் ரவிக்கை போட்டு, ஜயதி ஜயதி பாரத மாதா பாடிக் காண்பித்துக் குரல்வளம் உண்டு என்று நிரூபிக்க,


தலை கூட நிமிராமல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை சாரும் சரின்னு சொல்லிட்டாராம்.

மேற்கொண்டு சம்பந்தம் பற்றிப் பேச, பெண்ணின் அப்பா திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அங்கு காருகுறிச்சியில் ஏற்கனவே சகலை இருந்ததால்

அவரையும் அழைத்துப் போய் லௌகீகம் பேசி முடித்தனர்.

திருமணம் வரும் வைகாசி மாதம்,மே 17 நடக்க நிச்சயம் செய்தனர்.

கீழநத்தத்தில்தான் திருமணம் என்பது உறுதியானது.


அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம்.விலை வாசிகள் உயர்ந்த பட்ச விலையில் இருந்ததால் கிராமத்தில் திருமணம் நடத்த ,தீர்மானம் செய்திருக்கவேண்டும்.

பிள்ளை வீட்டார்

திருநெல்வேலியிலிருந்து கீழநத்தம் வரும் வண்டி செலவை பெண்ணின் அப்பா ஏற்றுக்கொண்டார்.

மூன்று நாட்கள் திருமணம். பிள்ளைவீட்டாருக்குத் தனி வீடு அமைத்துக் கொடுத்து சமைக்க ஆளும் ரெடி.

வெள்ளைக்குதிரைகள் பூட்டின சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைக்க வேண்டும்,

புஷ்பா என்கிற படு நாகரீகமான பேரை (!) ஜெயலக்ஷ்மி என்று மாற்ற வேண்டும், இதெல்லாம் திருமதி திருவேங்கடவல்லி ஸ்ரீனிவாசன், பையனோட அம்மா போட்ட கண்டிஷன்.:)))

ஆனால் இந்த வெள்ளைக் குதிரை வேற நினைத்து விட்டது.

எங்கள் வீட்டு காமெடி டைம் நிகழ்ச்சி அப்பாவின் குதிரைவண்டி சவாரியும்

குதிரை தறிகெட்டு ஓடினதும்தான்.:))))

No comments:

மே மாதத் திருமணங்கள் 2 ஆம் பாகம் கீழ நத்தம்

Thursday, August 02, 2007 ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட், பெண்ணுக்கு எத்தனை பட்...